மாணிக்கம் மாணிக்கம் என்று கூப்பிட்டாள் மரகதம், என்னம்மா நாளைக்கு உங்க அப்பாவிற்கு ஹார்ட் ஆப்பரேசன் அதற்கு தேவையான ஏற்பாடுகளை எல்லாம் சென்சிட்டியப்பா? மாணிக்கம் அதிகமாக படிக்கவில்லை என்றாலும் திறமைசாலி. அவனது அப்பா மளிகை கடை ஒன்றை நடத்திவந்தார். மாணிக்கத்திற்கு என்று தனியாக கடை ஏதும் வைத்து தரவில்லை என்றாலும் அவனது அப்பாவிற்கு பிறகு அந்த கடைக்கு உரிமையாளன் அவனே. மாணிக்கத்திற்கு ஒரு தங்கையும் உண்டு அவளது கல்யாணத்தை அங்கே இங்கே கடனை வாங்கி ஒரு வழியாக திருமணத்தை முடித்து வைத்திருந்தான். அதற்குள் அவனது அப்பாவிற்கு உடல் நிலை சரி இல்லாமல் போய் அவருக்கு ஹார்ட் ஆப்பரேசன் செய்தே ஆகவேண்டும் என்று டாக்டர்கள் கூறி இருந்தனர்.
தெரிந்தவர்கள் அனைவரிடமும் இப்போது தான் கடன் வாங்கி இருந்தான். பாவம் பணத்திற்கு என்ன செய்வதென்று தெரியாத நிலையில் தான் அவனது பாலிய சிநேகிதனான முருகன் அவனது நினைவிற்கு வந்தான். அவன் அவனது தங்கையின் திருமணத்திற்கு வந்த போது உனக்கு எந்த உதவிவேண்டுமானாலும் தயங்காமல் தன்னிடம் வந்து கேட்குமாறு கூறியிருந்தான். அது மாணிக்கத்தின் நினைவிற்கு வந்தது. ஆனால் என்ன செய்வது மாணிக்கம் இருப்பது கிராமத்தில் முருகன் இருப்பதோ டவுனில். எப்படியும் போய் வர ஒரு நாள் ஆகிவிடும். என்ன செய்வது பணம் வேண்டுமே. தனது அம்மாவான மரகதத்திடம் விஷயத்தை கூறி விட்டு டவுனுக்கு சென்று முருகனை சந்தித்தான்.
தனக்கு பணம் தேவைப்படுவதையும் தனது தந்தைக்கு ஆப்பரேசன் செய்தியையும் முருகனிடம் தெரிவித்தான். அவனும் மாணிக்கம் கேட்ட தொகையான ஒரு லட்ச ரூபாயை கடனாக கொடுத்தான் ஆனால் சீக்கிரம் திருப்பி தந்துவிடவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தான். அந்த தொகையை வாங்கிக்கொண்டு காலையில் தான் வீட்டிற்கு வந்து அமர்திருந்தான் மாணிக்கம். என்னப்பா உன்னுடைய சிநேகிதனான முருகன் பணம் கொடுத்தானா என்று மரகதம் கேட்டாள். கொடுத்தான் அம்மா. அந்த பணத்தை கொண்டுபோய் காலையிலேயே ஆஸ்பத்திரியில் கட்டிவிட்டு ஆபரேஷனுக்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்துவிட்டு தான் அம்மா வந்தேன் என்று கூறினான் மாணிக்கம். ஒரு வழியாக அப்பாவிற்கு ஹார்ட் ஆப்பரேசன் நல்ல படியாக முடிந்தது. திரும்பிப்பார்ப்பதற்க்குள் நான்கு மாதங்கள் உருண்டோடின. முருகனுக்கு பணத்தை புரட்டி எப்படியாவது கொடுக்க வேண்டும்.என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தான் மாணிக்கம்.
மளிகை கடையில் முன் மாதிரி ஓஹோ என்று வியாபாரம் நடப்பதில்லை இருந்தாலும் அன்னன்னிக்கு வரும் வருமானத்தை வைத்து கடையை நடத்தி வந்தான் மாணிக்கம். வெகு நாட்கள் ஆகியும் மாணிக்கத்திடம் இருந்து எந்த தகவலும் வராததால் முருகனே மாணிக்கத்தின் வீட்டிற்கு வந்து விட்டான். என்ன மாணிக்கம் பணத்திற்கு என்ன பண்ணபோறே என்றான் முருகன். மாணிக்கத்திற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் நாள் பொறுத்துக்கோ எப்படியாவது ரெடி பண்ணி கொடுத்து விடுகிறேன் என்றான். பணம் கொடுத்தே ஆறு மாதத்திற்கு மேல் ஆகிறது இதற்கு மேல் நீ எங்கிருந்து ரெடி பண்ணுவே. எனக்கு அவசரமா பணம் தேவைபடுகிறது. நீ ஒன்னு பண்ணு ஏன் இந்த மளிகை கடையை வைத்துக்கொண்டு இங்கு இவ்வளவு கஷ்டபடறே. பேசாம இத வித்துட்டு என்னோடு டவுனுக்கு வந்திடு. அங்கே உனக்கு தெரிந்த தொழில் செய்து பிழைத்துக்கொள் என்று கூறினான்.
மாணிக்கம் அவனது பேச்சில் உள்ள சூட்சமத்தை அறியாதவனாய் அந்த மளிகை கடையை அவனுக்கே விற்று விட்டு முருகனிடம் கடனை திருப்பி கொடுத்து விட்டான். தனது பணம் கைக்கு வந்தவுடன் ஊருக்கு புறப்பட்டான் முருகன். மாணிக்கம் தனது அம்மாவிடம் தானும் ஊருக்கு புறப்படுவதாக கூறினான். மரகதம் எவ்வளவோ கூறியும் மாணிக்கம் கேட்கவே இல்லை. முருகனுடன் டவுனுக்கு புறப்பட்டான். மாணிக்கத்திற்கு மளிகை கடையை தவிர வேறு எதுவும் தெரியாது. அங்கு என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் சின்னதாய் ஒரு கடையை வைத்தான். ஆரம்பத்தில் நிறைய வியாபாரம் நடந்தது. ஆனால் போக போக மாணிக்கம் தடுமாற ஆரம்பித்தான். அனைவரும் நான் முருகனது சொந்தக்காரன், முருகனுக்கு வேண்டியவர்கள் என்று கூறி பொருட்களை கடனாகவும், சிலர் காசு கொடுக்காமலும் பெற்றுச் சென்றனர்.
முருகனது வீட்டாரும் அனைத்து பொருட்களையும் இங்கேயே வாங்கிச்சென்றனர். தனக்கு பணம் கொடுத்து உதவியவனாச்சே அதனால் காசு வாங்க மனம் வரவில்லை மாணிக்கத்திற்கு. இப்படியே சில நாட்கள் உருண்டோடின. கடையில் ஒவ்வொரு பொருட்களாக தீர ஆரம்பித்தது, ஆனால் கல்லாவில் பணம் சேரவில்லை . மாணிக்கம் முருகனிடம் சென்று பணம் கேட்டான் அவனும் கொடுத்தான். ஆனால் எவ்வளவு நாளைக்குதான் இப்படி பணம் வாங்கி வாங்கி பொழப்பு நடத்துவது. ஆரம்பத்தில் கொஞ்சம் பணமாவது தன் தாய்க்கு அனுப்பிவைத்த மாணிக்கம் இப்போது அதை அனுப்புவதற்கு மிகவும் கஷ்டப்பட்டான். கடை மிகவும் கடனில் ஓட ஆரம்பித்தது. அவன் கிராமத்தில் இருந்தால் அன்றன்று வரும் வருமானத்தை கொண்டு எப்படியோ பிழைத்துக்கொண்டு வந்தான். இங்கு அதுவும் போய்விட்டது. சிறிது நாட்களில் கடைக்கு வாடகை கொடுக்காததால் கடையை காலி செய்து தர சொன்னார்கள். முருகனிடம் இதை தெரிவித்த போது இதை அவன் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. என்னிடம் தற்போது பணம் ஏதும் இல்லை என்று கூறி விட்டான்.
மாணிக்கத்திற்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. அப்போது தான் தனது தாய் மரகதம் கூறியதை உணர்ந்தான். கூழோ கஞ்சியோ இங்கேயே எதோ ஒரு பெட்டிக்கடை வைத்து பிழைத்துக்கொள்ளலாம் என்று கூறினாள். மாணிக்கம் கடையில் இருந்த பொருட்களை எல்லாம் விற்று விட்டு முருகனிடம் இருந்து வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு மற்ற கடன் களையும் சரி கட்டி விட்டு ஊருக்கு புறப்படுவதாக கூறினான். முருகன் இங்கேயே சிறிது நாள் இருந்து வேறு வேலை எதாவது ஏற்பாடு செய்து தருவதாக கூறினான். அதற்கு மாணிக்கம் இல்லை எனது கிராமதிற்கே சென்று பிழைத்துக்கொள்வதாக கூறிவிட்டு தனது தாய்தந்தையரிடமே வந்து விட்டான். மரகதம் வெகு நாள் கழித்து மாணிக்கத்தை பார்ப்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். மாணிக்கம் நீ அனுப்பிய காசுகளை நான் செலவு செய்தது போக மீதியை பத்திரபடுத்தி வைத்திருக்கிறேன். இந்தா அதை வைத்து ஒரு பெட்டிக்கடை வைத்து அதில் வரும் வருமானத்தை கொண்டு பிழைத்து கொள்ளலாம் என்று கூறினாள் மரகதம். தனது தாயின் பரிவை எண்ணி கண்களில் நீர் மல்க தனது தாயை அணைத்துக்கொண்டான் மாணிக்கம்.
1 comment:
அழகான எழுத்துக்கள். உங்களைப்போல் என்னால் எழுத முடியாது. ஆனால்
நானும் கதை எழுதுகிறேன். படித்துவிட்டு சொல்லுங்கள் http://eluthuvathukarthick.wordpress.com/ .
உங்கள் விமர்சனத்தை எதிர்ப்பார்க்கிறேன்.
Post a Comment